ஜெ., வசித்த வீடு நினைவுச் சின்னமாகுமா?- அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
ஆதரவு எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு சின்னமாக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம்தேதி எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அவர் பதவியேற்று நூறு நாட்கள் நிறைவடைய உள்ளது. இதுவரை அவர் மூன்று தடவை தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். நான்காவது முறையாக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக அரசுக்கு போதாத காலம்தான். கட்சி உடைந்தது ஒரு பக்கம் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் எம்எல்ஏக்களின் நெருக்கடியால் ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அதிருப்தியில் எம்எல்ஏக்கள்
கடந்த 23ஆம் தேதி பத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். இதனால் மீண்டும் அதிமுகவில் அதிருப்தி நிலவுகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அணி அணியாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அமைச்சரவைக் கூட்டம்
இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் நிலவும் பிரச்சனை குறித்து பேசப்படாது எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படும்.

முக்கிய ஆலோசனைகள்
பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளிப்பது குறித்தும், வீட்டு மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பை 25 சதவீதம் குறைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெயலலிதா வீடு
ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவது, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களின் விருப்பம்
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடமையாக்கி அதை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மூலம் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. எனவே இன்றைய கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications