வருமான வரி வழக்கு: இன்றும் ஆஜராகாத ஜெ- சசி, மே 19க்கு ஒத்திவைப்பு
சென்னை: வருமான வரி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா இன்றும் ஆஜராகவில்லை. இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா மீதான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு இன்று எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை கடந்த 1991 -92, 1992-93 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை. 1993- 94ம் ஆண்டுக்கு, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமான வரி துறையிடம் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரி துறையினர், கடந்த 1996ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன்பின், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்பாக, கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொள்ள மறுத்த நீதிபதிகள், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வருமான வரி தொடர்பான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளிவைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஏற்கனவே சசிகலா 28 ந்தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது சார்பில் எழும்பூர் நீதிமன்றதில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி தட்ஷிணா மூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சசிகலா, ஜெயலலிதா இருவரும் ஆஜராகவில்லை. ஜெயலலிதா, தற்போது கொடநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.