சிங்கிளாக ஜெயித்த ஜெயலலிதா: தமிழக வரலாற்றில் மைல் கல் வெற்றி
சென்னை: தமிழக வரலாற்றில் மிக நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு கட்சி தனித்து நின்று இத்தனை பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்றால் அது அதிமுகதான் என்று அரசியல் விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

ஓங்கியிருந்த காங்கிரஸ் கை
தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது. தமிழகத்தில், திமுக - அதிமுக தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு நாடாளுமன்றதேர்தல்களை சந்தித்து வருகிறது.

கம்யூனிஸ்டுகளுக்கு கல்தா
இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்ட ஜெயலலிதா, அதன்பிறகு கடைசி நேரத்தில் அவர்களை கழற்றிவிட்டார். இதனால் நாற்பது தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று ஜெயலலிதா அறிவித்தார்.

கூட்டணியில் திமுக
அதே நேரத்தில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்), புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 35 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக போட்டியிட்டது.

நேருக்கு நேர் மோதல்
ஆகமொத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேராக 35 தொகுதிகளில் மோதிக்கொண்டன. பாஜக தலைமையில் அமைந்த வானவில் கூட்டணியும் அதிமுகவை 40 இடங்களிலும் எதிர்கொண்டது. மோடி அலை, திமுகவின்வாக்கு வங்கி என அனைத்து காரணிகளுக்கு எதிராகவும் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிவந்தது.

எத்தனை பிரச்சனைகளப்பா..
மின்வெட்டு பிரச்னை, குடிநீர் பிரச்சனை என எத்தனையோ மக்கள் வாழ்வாதார பிரச்னைகள் அதிமுகவுக்கு குறுக்கே முட்டுக்கட்டை போட்டன. ஆனால் அவையனைத்தும் மிக இலகுவாக தாண்டிச்செல்லப்பட்டுள்ளது ஜெயலலிதாவால். 2004ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணி முழு அளவில் வெற்றி பெற்றது. ஆனால் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட 90 சதவீதம் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றுள்ளது.

நீங்கள் செய்துவிட்டீர்களே
ஜெயலலிதாவின் அபார வெற்றி கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தொடங்கிவிட்டது. திமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கும் வரவிடாமல் தனது கூட்டணியில் இருந்த தேமுதிகவை அந்த இடத்துக்கு கொண்டுவந்தது. நீங்கள் செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா...? என்ற சட்டமன்ற தேர்தல் வாசகம் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவின் ராசியான வாசகமாக மாறியுள்ளது.இனிமேல் வரும் தேர்தல்களிலும் ஜெயலலிதாவின் பிரச்சார ஸ்டைல் இதேபோலத்தான் இருக்கும் என இந்த வெற்றி கட்டியம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications