ராகுகாலத்தில் பிரச்சாரம் செய்த ஜெ… பேச்சை ரசிக்காத தொண்டர்கள்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, சரியாக ராகு காலத்தில் தொடங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிர பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி முதலில் நாகப்பட்டினத்தில் இன்று மதியம் ஜெயலலிதா பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நாகப்பட்டினத்தில் பேச்சு
கூட்டத்திற்கு வந்தவர்களிடம் 12 மணிக்கு முதல்வர் வந்துவிடுவார். மதியம் 1.30க்குள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மயிலாடுதுறைக்கு சென்றுவிடுவார் என கட்சி நிர்வாகிகள் சொல்லியிருந்தனர். காரணம் 1.30 முதல் 3 மணி வரை ராகுகாலம் என்பதுதான். அதன்படி முதல்வரைக் காண வந்தவர்களும் 10 மணி முதலே வெயிலில் காத்திருந்தனர்.

ராகு காலத்தில் வந்த முதல்வர்
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ராகுகாலத்தில் இரண்டு மணிக்கு மேல் வந்து சேர்ந்த முதல்வர் சரியாக மூன்று ஒன்றுக்கு பிரசாரத்தை முடித்தார். எந்த செயல் செய்தாலும் நல்ல நேரம் பார்க்கும் முதல்வர் இன்று மட்டும் விதிவிலக்காக ராகு காலத்தில் பிரசாரத்தை தொடங்கியது ஆச்சரியமாக இருந்தது.

கை தட்டாத தொண்டர்கள்
முதல்வர் எந்த கூட்டத்தில் பேசினாலும் குறிப்பிட்ட பேச்சுக்கு தொண்டர்கள் கைத்தட்டுவது வாடிக்கை. அதற்கேற்றார்போல் அவரும் இடைவெளி விட்டுப் பேசுவார். ஆனால் இந்த கூட்டத்தில் காவிரி நடுவர்மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட வைத்தேன் என பேசி இடைவெளி விட்டார். ஆனால் யாரும் கை தட்டவில்லை.

பொறுப்பாளர்களை காணோமே
அடுத்து, மீத்தேன் தொடர்பாக பேசும்போதும் எங்கள் ஆட்சியில் இதுவரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை என்று நிறுத்தினார். அதற்கும் யாரும் கை தட்டவில்லை.
அனைத்து கூட்டங்களிலும் அந்த கூட்டத்திற்கான பொறுப்பாளர்கள் மேடையில் நின்று கொண்டு முதல்வரின் பேச்சின் போது கை தட்டுவார்கள். அதைப்பார்த்து தொண்டர்கள் கை தட்டுவார்கள் இந்த கூட்டத்தில் அப்படி யாரும் மேடையில் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications