நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் 10 பேரை மீட்க நடவடிக்கை - ஜெ.,
சென்னை: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 19 பேர் கடந்த 20 ஆம் தேதி நேபாளத்திற்கு யாத்திரை சென்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோபி (வயது 40) என்பவர் தலைமையில், காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த 20-ந் தேதி 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
இதனிடையே நேபாளத்தில் திடீரென கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. 7 பேர் மட்டும் நிலச்சரிவிற்கு முன்பே இந்திய எல்லைக்குள் வந்துவிட்டனர். 10 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கி கொண்டனர். அங்கிருந்து வர முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் 10 பேரை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தமிழர்கள் அனைவரும் சென்னை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை ஹலிகாப்டர் மூலம் மீட்டு கொண்டு வருவதற்கு ரூ.2.10 லட்சத்தை இந்திய தூதரகத்திற்கு செலுத்தவும் தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications