Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே பட்ஜெட்டை பொதுவாக வரவேற்கிறேன்!- இது ஜெயலலிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வைர நாற்கர திட்டத்தில் சென்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட் 2015 குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த ஆண்டு 2015-2016-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் எவ்வித பயணிகள் கட்டண உயர்வையும் அறிவிக்காமல், ஏழை, எளிய சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாத ரயில்வே அமைச்சரின் பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது.

Jayalalithaa welcomes Railway Budget 2015

நடப்பு நிதியாண்டில் திறமையான நடவடிக்கைகள் மூலம் ரயில்வே துறையின் செயல்பாட்டு விகிதத்தை மேம்படுத்தி குறிப்பிடத்தக்க சாதனையை எட்ட ரயில்வே மந்திரி திட்டமிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

பெண் பயணிகள் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பு, ரயில்வே துறையில் தூய்மை, சுற்றுப்புற சூழலை தொடர்ந்து நிர்வகிப்பது போன்றவற்றுக்கு குறிப்பிடத்தக்க உயர் முன்னுரிமையை ரயில்வே அமைச்சர் அளித்துள்ளார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மூலம் பயணிகளுக்கான வசதிகளையும், மேம்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த செயல்பாடுகள் அவசியமானது மற்றும் வரவேற்கத்தக்க முயற்சிகள்.

குறைந்த விலையில், ரயில்வே துறையால் மின்சாரத்தை பெறும் திட்டத்தை, மாநிலங்களின் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்துடன் திணிக்கக்கூடாது. மாநிலங்களின் மின்சார பயன்பாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

வைர நாற்கர திட்டம்

வைர நாற்கர அதி விரைவு ரயில்வே இணைப்புத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திட்டத்தில் சென்னை வழித் தடத்தை இணைப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும்.

ரயில்வே அமைச்சர் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய கட்டமைப்பு நிதி திட்டம், வேறு எந்த மாநில அரசும் மேற்கொள்ளாத முயற்சியாக, என்னால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை திட்டத்தை போன்றதாக அமைந்துள்ளது. தமிழக உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில், ரயில்வே அமைச்சகம் புதிய கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், அதிக நிதியை தமிழகத்திற்கு வழங்கும் என நம்புகிறேன்.

தமிழகத்தில் 10 முக்கியமான புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஆதரவு கோரிய நிலையில், தமிழகத்தில் முந்தைய நிகழ்வுகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 22 திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்ததும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது நிறைவடைந்த பின்னர், புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் போது, மாநில அரசின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் சேர்க்கப்பட்டுள்ள சென்னை-தூத்துக்குடி சரக்கு ரயில் முனையம், சென்னை, மதுரை, கன்னியாகுமரி அதிவிரைவு பயணிகள் ரயில் இணைப்பு, கோயம்புத்தூர்- மதுரை அதிவிரைவு பயணிகள் ரயில் இணைப்பு ஆகிய 3 முக்கிய ரயில்வே திட்டங்களை, சிறப்பு ரயில் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். இத்திட்டங்களை மத்திய அரசு விரைவாக முன்னெடுத்துச் செல்லும் என எதிர்நோக்கியிருக்கிறேன்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரிடம் நான் நேரில் அளித்த கோரிக்கை மனுவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன், சென்னை பறக்கும் ரயில் சேவைத் திட்டத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும். இதற்கான குறிப்பிட்ட எந்தவொரு அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை என்றாலும், எனது கோரிக்கை விரைந்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன்.

ரயில்வே துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு ரயில்வே மந்திரி திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. முந்தைய காலங்களில், அப்போதைய ரயில்வே அமைச்சர்கள் ஏராளமான திட்டங்களை அடுத்தடுத்த ரயில்வே பட்ஜெட்டுகளில் அறிவித்து பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், அந்த திட்டப்பணிகள் மிக தாமதமாக நடைபெற்று வருகின்றன.

வரவேற்கிறேன்

இந்தத் திட்டங்களை விரைந்து முடிக்க பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சரை தமிழக அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது. தமிழகத்திற்கு முதலீட்டிற்கான நிதி போதிய அளவு ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.

புதிய ரயில்கள் அறிமுகம் தொடர்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வழக்கமான அறிவிப்புகள் எதையும் ரயில்வே அமைச்சர் வெளியிடாதது, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ரயில்வே அமைச்சர் மற்றும் மத்திய அரசின் நோக்கம், குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை உருவாக்குவது தான் என்பது இந்த பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது.

இந்த நோக்கம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும், ரயில்வே துறையை நீண்டகால அடிப்படையில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், சாதாரண மக்களுக்கு எவ்வித கூடுதல் சுமையையும் ஏற்படுத்தாத விதத்திலும், தாக்கல் செய்யப்பட்டுள்ள 2015-2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பொதுவாக வரவேற்கிறேன்.

-இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+