ஜெயலலிதா குணமடைந்தார்: விரைவில் வீடு திரும்புவார்.. அப்பல்லோ அறிக்கை
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வு பெற்று வரும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காய்ச்சல், நீர்ச்சத்து காரணமாக முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று நள்ளிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள் எனத் தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவமனை வாயிலில் தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு புதன்கிழமையும் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனையை முதல்வர் மேற்கொள்வது வழக்கம். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக, இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
ஜெயலலிதாவிற்கு அதிக அளவில் திருஷ்டி பட்டுவிட்டதாக கூறி அதிமுக தொண்டர்கள் மிகப்பெரிய பூசணிக்காய் மீது சூடம் ஏற்றி அதை மருத்துவமனை முன்பு சுற்றி உடைத்தனர். இந்த நிலையில் ராகுகாலம் முடிந்து ஜெயலலிதா 12 மணிக்கு மேல் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியானது.
முதல்வர் இப்போது நன்றாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மற்றொரு அறிக்கை வெளியானது. அதில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமான உணவு உட்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. முதல்வருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குணமாகிவிட்டதாக தகவல் வெளியானதை முன்னிட்டு தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.