தமிழக அமைச்சரவையில் நாளை மறுநாள் மாற்றம்? பீதியில் அமைச்சர்கள்! எதிர்பார்ப்பில் எம்.எல்.ஏக்கள்!!
சென்னை: தமிழக அமைச்சரவையில் நாளை மறுநாள் மாற்றங்கள் செய்யப்படக் கூடும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவை கடந்த 3 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு கட்சியிலும் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்களை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டார்.

மூவர் வெளியே
கடந்த மே மாதம் வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்தல் காரணம்
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வென்றதால் பச்சைமால் பதவி பறிபோனது. திருவள்ளூரில் ஒழுங்காக தேர்தல் வேலை பார்க்காததால் ரமணாவின் பதவி பறிக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் முடங்கிக் கிடந்ததால் தாமோதரனும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மூவர் உள்ளே
இவர்களுக்கு பதிலாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் 3 அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.

அமாவாசை நாள்
இந்த நிலையில் நாளை மறுநாள் அமாவாசை நாள் என்பதால் அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அமாவாசை நாளில்தான் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறுகிறது என்பதாலே இம்முறையும் ஏக பதற்றத்தில் இருக்கிறது தலைமை செயலகம்.

பெயர்ச்சிக்கு பிந்தைய அமாவாசை
அதுவும் குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிந்தைய அமாவாசை என்ற காரணத்தால் நிச்சயமாக அமைச்சரவையிலோ அல்லது அதிமுகவிலோ மிகப் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பில் எம்.எல்.ஏக்கள்
இதனால் தமிழக அமைச்சர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் யாருக்கு ஜாக்பாட் அடிக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் அதிமுக எம்.எல்.ஏக்கள்.












Click it and Unblock the Notifications