அப்பல்லோவிலும் ஆளுநர் மாளிகையிலும் நடந்தது இதுதான்... வைகோ விளக்கம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும் ஆளுநர் மாளிகையிலும் யார் யாரை சந்தித்தேன் என்கிற விவரங்களை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து வைகோ கேட்டறிந்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திடீரென வைகோ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் பல யூகங்களும் கிளம்பின.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்பது குறித்து வைகோ விளக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதாப் ரெட்டி, பீல்
இன்று காலை (8.10.2016) அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று, அதன் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்களைச் சந்தித்து, முதல் அமைச்சரின் உடல்நலம் குறித்துக் கேட்டு அறிந்தேன். லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கின்ற மருத்துவர் ரிச்சர்டு பீல் அவர்களையும் சந்தித்தேன்.
நன்றி
‘நீங்கள் இங்கிலாந்தில் இருந்து எங்கள் முதல் அமைச்சருக்குச் சிகிச்சை தருவதற்காக இரண்டாவது முறையாகவும் வந்தது, தமிழக மக்களுக்கு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். நீங்களும் மற்ற மருத்துவர்களும் தருகின்ற சிகிச்சையால், முதல் அமைச்சர் முழுமையான உடல் நலம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்' என்றேன். அதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
அமைச்சர்களுடன்...
தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற மக்கள் அவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன். ‘முதல் அமைச்சர் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள். உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு அவர்களது உடல்நிலை தக்க ஒத்துழைப்பு தந்து வருகின்றது. விரைவில் முழு உடல் நலம் பெறுவார்கள்.
அதிமுகவினர் கவலை நீங்கும்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்களின் கவலைகள் நீங்கும். அடுத்து ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன். ஆளுநருக்குப் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தேன்.
40 நிமிடம் சந்திப்பு
ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தபொழுது எனக்கு மிகச்சிறந்த நண்பர். அப்போதைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம். நட்பு அடிப்படையிலான இந்தச் சந்திப்பு 12.50 முதல் 1.30 மணி வரை 40 நிமிடங்கள் நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.