இலங்கை கைது செய்த 6 மீனவர்கள், 68 படகுகளை மீட்க கோரி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்துள்ள 6 மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மோடிக்கு புதன்கிழமையன்று ஜெயலலிதா எழுதிய கடித விவரம்:
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 மீனவர்கள் பல மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வீடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த 17 மற்றும் 19 தேதிகளில் மீண்டும் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஒரு படகில் சென்ற 3 மீனவர்கள் 17-ம் தேதி கைது செய்யப்பட்டு காங்கேசன் துறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல், தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரத்தில் இருந்து, நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் 19-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்தியில் மீன்பிடிக்கும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்தியா -இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை முடிந்துவிட்ட விஷயமல்ல என்பதையும், கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ம் ஆண்டு இந்திய- இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு தன் நிலைப்பாடாக தொடர்ந்து கொண்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 104 பேர் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், அவர்களது 66 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் இதுவரை விடுவிக்கப்படாதது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. வடகிழக்கு பருவமழை காரணமாக படகுகளும், மீன்பிடி சாதனங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து வருகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரமான இவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு சீரமைத்து தரவேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கம் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1, 520 மற்றும் கடல் ஆழத்தை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கான திட்டத்துக்கு அனுமதி கோரி கடந்த 2014 ஜூன் 3-ம் தேதி மற்றும் கடந்தாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இந்த விவகாரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் மற்றும் 68 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.