வாக்குரிமையை விற்காதீர்கள்... தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஜெயம் ரவி
சென்னை: வாக்களிப்பது நமது கடமை, பணத்திற்காக விலைபோகக்கூடாது, வேட்பாளர்களை மனசாட்சிப்படி தேர்ந்தெடுங்கள் என தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகர் ஜெயம் ரவி.
வரும் 24ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, புதிய வாக்காளர்களை கவர்வதற்காகவும், வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறுவதற்காகவும் சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகர் (மண்டலம்-8) ‘டவர் பார்க்'கில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளார்களிடன் ஜெயம் ரவி கூறியதாவது :-

தலையாய கடமை...
வாக்களிப்பது நமது தலையாய கடமையாகும். ஒவ்வொரு முறையும் வாக்களிக்கும் போதும், நாம் நமது ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்துகொண்டு இருக்கிறோம் என்று எண்ணி பெருமைப்பட வேண்டும்.

பணத்திற்கு விலை போகாதீர்கள்...
வாக்களிப்பது நமது உரிமை. நமது உரிமையை நாம் எதற்காகவும் விட்டுத்தரக்கூடாது. பணத்திற்காக விலைபோகவும் கூடாது.

வாக்காளர் என்ற முறையில்...
நல்லவர்கள் யாரோ? அவர்களை மனசாட்சிப்படி தேர்ந்தெடுங்கள். இதை நடிகர் என்ற முறையில் அல்ல, நானும் ஒரு வாக்காளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செயல் விளக்கம்...
கண்காட்சியில் பொதுமக்கள், வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்திய உடன் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதை காண்பிக்கும் வசதி கொண்ட எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் அதிகாரிகள் எஸ்.இளங்கோவன், ஆர்.சிதம்பரநாதன் ஆகியோர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.












Click it and Unblock the Notifications