செங்கோட்டை சைவ பிள்ளைமார் கோவிலில் ரூ. 1.50 லட்சம் நகைகள் கொள்ளை
செங்கோட்டை: செங்கோட்டை சைவ பிள்ளையார் கோவிலில் பூட்டை உடைத்து தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
செங்கோட்டை ஹரிஹரா நதியின் கரையில் அமைந்துள்ளது ஆரிய குற்றால விநாயகர் ஆலயம். இதை சைவ பிள்ளையார் கோவில் என்று இப்பகுதியினர் அழைப்பார்கள்.
இந்த ஆலயம் செங்கோட்டை வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த ஆலயத்தில் நேற்று இரவு பூஜைகளை முடித்து விட்டு பூசாரி கங்காதரன் கோவிலின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இன்று காலை வழக்கம் போல் 7மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு மற்றும் மூலவர் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், கோவில் தங்க,வெள்ளி.பொருட்கள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க,வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் கண்டு திடுக்கிட்ட அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து,பின் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு கொள்ளை போன பொருட்களின் மதிப்பை கணக்கிட்டனர். சுமார் ரூபாய் 1.50 லட்சம் மதிப்புள்ள தங்க,வெள்ளி,பொருட்கள் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.