மின்சார ரயிலில் பயங்கரம்.. திருடனுடன் 2 பெண்கள் கடும் சண்டை.. 50 பவுன் நகையுடன் தப்பிய கொள்ளையன்!
அரக்கோணம்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடிக் கொண்டிருந்த மின்சார ரயிலில் பயணித்த முகமூடித் திருடன் 2 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து நகைகளை காப்பாற்ற பெண்கள் துணிச்சலுடன் போராடிப் பார்த்தனர். ஆனால் கடைசியில் 50 பவுன் நகைகளுடன் திருடர்கள் தப்பி விட்டனர்.
ரயில்வே வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்த அட்டகாசம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், நகரியில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு பிரசன்னா, ரேவதி ஆகிய இரு பெண்களும் நேற்று ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்து மூலம் திருத்தணிக்கு வந்த இவர்கள் இரவு 9 மணி அளவில் அங்கிருந்து சென்னை செல்லும் மின்சார ரயிலில் ஏறினர். அந்த பெட்டியில் இருந்தவர்கள், வேறு ரயிலுக்கு மாறி சென்றனர்.
அப்போது, பெட்டியில் இருந்த அடையாளம் தெரியாத நபர் முகமூடி அணிந்து வந்து இரண்டு பெண்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். நகைகளைத் தர மறுத்த பெண்களை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது, முகமூடி கொள்ளையருக்கும், பெண்களுக்கும் இடையே பெட்டிக்குள் சுமார் 10 நிமிடங்கள் சண்டை நீடித்துள்ளது.
முடிவில் இரு பெண்களிடம் இருந்தும் 50 சவரன் நகைகளை கொள்ளையன் பறித்துள்ளான். அரக்கோணம் அருகே மின்சார ரயில் வந்த போது அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் இரு பெண்களும் கொள்ளை குறித்து அரக்கோணம் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். அரக்கோணம் மருத்துவமனையில் இருபெண்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட இரு பெண்களும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் நிகழ்ந்த பெட்டியில் பாதுகாப்புக்கு பெண் காவலர்கள் யாரும் இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்குத் தப்பி ஓடி விட்டனர் என்று முன்பு ஒரு தலைவர் கூறினார். ஆனால் இப்போது ஆந்திராவிலிருந்து வந்த இரு பெண்களிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.. ஒரு வேளை தப்பி ஓடிய திருடர்களில் ஒருவன் மட்டும் ஆந்திராவிலிருந்து ரிட்டர்ன் ஆகி விட்டானோ என்னவோ...!