மீனவர்களை முழுமையான ராணுவ பலத்தை பயன்படுத்தி மீட்காதது ஏன்?- திவாகரன் மகன் ஜெயானந்த் கேள்வி
மீனவர்களை முழுமையான ராணுவ பலத்தை பயன்படுத்தி மீட்காதது ஏன்? என திவாகரன் மகன் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை ராணுவ பலத்தை முழுமையாக பயன்படுத்தி மீட்காதது ஏன் என திவாகரன் மகன் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்தியாவில் அதிகமாக ராணுவ விமானங்களும், ஹெலிக்காப்டர்களும் உள்ளன. இவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்டவை.

கார்க்கில் போருக்குப் பிறகு நாம் யாரும் எந்தவொரு போரையும் பெரிதாகப் பார்க்கவில்லை. நம் நாட்டு ராணுவத்தில் உள்ள தளவாடப் பொருட்களைச் சண்டைக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை.
அதனை மக்களுக்காகவும் பயன்படுத்தலாம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் புயல், நில நடுக்கம் ஏற்படும் போது இராணுவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் அப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் நான்காவது நாளாக கரை திரும்பவில்லை. ஆனால், இப்படிப்பட்ட சூழலில் எந்தவொரு ராணுவ விமானப் படையும் கடலோரப் பகுதிக்குப் பறந்து செல்ல உத்தரவிடப்படவில்லை.
இந்திய இராணுவம் நினைத்தால் இருபத்து நான்கு மணி நேரத்தில் அனைத்து மீனவர்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஏன் அவ்வாறு இந்திய இராணுவத்திற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிடவில்லை.
அவ்வாறு பிறப்பித்து இருந்தால் பல உயிர்கள் தப்பித்து இருக்கும். இருபத்து நான்கு மணி நேரத்தில் அனைத்து மீனவர்களையும் காப்பாற்றியிருக்க முடியும். ஏனென்றால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த விமானப் படையையும் , ஹெலிக்காப்டர்களையும் (உலங்கு ஊர்தி) ஒரு நாள் அனுப்பியிருந்தால் ஒரு சில மணி நேரங்களில் அவை கன்னியாகுமரி அருகில் உள்ள ஆழ் கடலுக்குச் சென்று எங்கெங்கு மீனவர்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஏரியல் வியூ (areal view) வழியாகக் கண்டறிந்து மீட்டிருக்கலாம்.
இதற்கு அரை நாள் மட்டுமே தேவைப்படும்.இதை முழுக்க முழுக்க ஒரு மிலிட்டரி ஆபரேசன் என்று அறிவிக்காமல் ஏன் வெறும் கோஸ்டல் கார்டுகளையும் ஒரு சில ஹெலிக்காப்டர்களையும் வைத்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் கப்பல் படையை வைத்து தேட வேண்டும். விமானத்தைக் கொண்டு மீனவர்களைத் தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்குக் கப்பலை அனுப்பி ஏன் அவர்களை மீட்க வில்லை.
கன்னியாகுமரியில் இருந்து சென்ற மீனவர்கள் , கேரள மீனவர்கள் , கடலோர மீனவர்கள் என இரு மாநில மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை மீட்க அரை நாள் போதும் . ஆனால், இன்று வரை மத்திய அரசு இந்திய இராணுவத்தை உள்ளே இறக்க வில்லை. எதற்காக, செலவை மிச்சப்படுத்தவா? விமானத்தின் வெள்ளை எரிபொருள் (white petrol) விலை சற்று அதிகம் என்பதற்காகவா? எதை மிச்சப்படுத்தப் போகிறார்கள்.
இவ்வாறு ஜெயானந்த் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications