"குஷ்புக்கு மயிலாப்பூரை கொடுத்தால்.. ஜோதிமணிக்கு கண்டிப்பாக அரவக்குறிச்சியை கொடுத்தே ஆக வேண்டும்"
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில்தான் தான் வேட்பாளர் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்து வந்தார் ஜோதிமணி. ராகுல் காந்தியால் நேரடியாக பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர். ஒரு வேட்பாளர் போல கிராமம் கிராமாக போய் பல மாதங்களாக பிரசாரமே நடத்தி வந்த ஜோதிமணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல்.
அவர் கடுமையாக உழைத்து வந்த அரவக்குறிச்சியை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கவில்லை. மாறாக கரூர் உள்ளிட்ட அருகாமைத் தொகுதிகளையே திமுக காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.
ஆனால் இதனால் சற்றும் தளராத ஜோதிமணி தான் போட்டியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஜோதிமணி சென்னிமலை
இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணி ராகுல் காந்தியால் பாராட்டப்பட்டவர். படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த இளம் தலைவர்.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி தொகுதியில் படு தீவிரமாக களப் பணியாற்றி வந்தவர். பல மாதங்களுக்கு முன்பே தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றி வந்து பிரசாரம் செய்து வந்தார்.

தொகுதியிலும் ஆதரவு
ஜோதிமணியின் எளிமையான பேச்சு, இயல்பான அணுகுமுறை போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட கிராம மக்களிடையே அவருக்கு நல்ல பெயரும் இருந்து வருகிறது.

நம்பிக்கை வீண்
இப்படி பெருத்த நம்பிக்கையுடன் கிராமங்கள் தோறும் தனது முகத்தையும், காங்கிரஸின் முகத்தையும் பதிய வைத்துக் காத்திருந்த ஜோதிமணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.

பெரும் ஏமாற்றம்
இதனால் ஜோதிமணி பெரும் ஏமாற்றமடைந்துள்ளார். ஆனாலும் தான் போட்டியில் நீடிப்பதாகவும், தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து களப் பணியாற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு நன்றி
மேலும் அவர் போட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், கடந்த இரண்டு தினங்களாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெறுவதற்கு கடும் முயற்சி மேற்கொண்ட தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. எந்த சூழ்நிலையிலும் என்போன்ற உண்மையான மக்கள்தொண்டர்கள பக்கம் நிற்பவர் அவர். எனது அரசியல் நம்பிக்கைகளை வளர்த்தெடுத்த எனது தலைவர் என் பக்கம் நின்றார் ,நிற்கிறார் என்பதே எனது மாபெரும் பலம் ,நம்பிக்கை.அதுவே எனக்கு போதுமானது .
தொடர்ந்து களம் காண்போம் #அரவக்குறிச்சி2016 என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

ராகுல் கேட்டும் கொடுக்கவில்லையா திமுக?
ராகுல் காந்தி தனக்காக கடுமையாக முயற்சி செய்ததாக ஜோதிமணி கூறியுள்ளதைப் பார்க்கும்போது, ராகுல் காந்தி விரும்பிக் கேட்டும் அரவக்குறிச்சியை திமுக கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலா?
அல்லது, காங்கிரஸ் தலைமை பாலிட்டிக்ஸ் செய்து இந்த சீட்டை வாங்கத் தவறி விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் நடிகை குஷ்புவுக்கு மயிலாப்பூரோ அல்லது வேறு தொகுதியோ ஒதுக்கும்போது ஜோதிமணி அரும்பாடுபட்டு கட்சிக்காக வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சியை கேட்பதில் நியாயம் இருக்கிறதே என்றும் காங்கிரஸிலேயே சொல்கிறார்கள்.

திமுகவின் திட்டம் என்னவோ?
அரவக்குறிச்சி தொகுதியில் மனுஷ்யபுத்திரன் அல்லது கவிஞர் சல்மாவை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும், இதனால்தான் அரவக்குறிச்சி தரப்படவில்லை என்றும் ஒரு தகவல் உலா வருகிறது.












Click it and Unblock the Notifications