ரஜினியின் 2.0 படப்பிடிப்பால் திருவல்லிக்கேணியில் நெரிசல்- படம்பிடித்த நிருபர் மீது தாக்குதல்
ரஜினிகாந்தின் 2.0 படப்பிடிப்புக்காக திருவல்லிக்கேணியில் சாலையில் இடையூறாக நின்றிருந்த வாகனங்களை புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு வாகனங்களை புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்ற வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இரவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிவிட்டு பகலில் படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. படப்பிடிப்பு வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவே இதனை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.
இதனையடுத்து புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது 2.0 படப்பிடிப்பு குழுவினர் தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.