தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீஸ் தாமே வழக்கு தொடராதது ஏன்? ஐகோர்ட் கேள்வி
தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் பெஞ்ச் தீர்ப்பளித்தது. தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.
இதனால் 3-வது நீதிபதி தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் தீர்ப்பு கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
டிவி நிகழ்ச்சிகளிலும் இந்த தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு.
ஆனால் தலைமை நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். அவர்கள் மீது போலீசார் தாமாக முன்வந்து ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?
முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்கு பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியை பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?
தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25-ந் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார் உத்தரவிட்டார்.