Lok sabha election 2024: அதிக தொகுதிகளை கேட்போம்.. மயிலாடுதுறையை விடமாட்டோம்.. கே.எஸ். அழகிரி கறார்
மயிலாடுதுறை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் கேட்போம் என்றும் மயிலாடுதுறையையும் கேட்டு பெறுவோம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, சாத்தியமான தொகுதிகள் உள்ளிட்டவைகளை அலசி வருகிறார்கள்.

அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இந்த தொகுதிகளில் எல்லாம் நிற்க போவதாக ஒரு பட்டியல் வெளியானது. இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: ''2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுகவுடன் காங்கிரஸ் நாடாளுமன்றத் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்ததாக கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்திருந்தது. இந்த கூட்டத்தில் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் செய்தியாளர்களிடம் கே எஸ் அழகிரி கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்போம். மயிலாடுதுறை தொகுதியையும் கேட்போம்.
நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ராமர் கோயில் கட்டியதால் மட்டுமே மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துவிடுவார்கள் என கருத முடியாது என கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி என்பது தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 28ஆவது தொகுதியாகும். இந்த தொகுதியில் 11 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த ராமலிங்கம் மயிலாடுதுறை தொகுதியில் வென்றார். கடந்த முறை காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications