ரஜினியை இழுக்கும் பா.ஜ.க வின் ஆசை வெட்கமறியாது! - வீரமணி கிண்டல்!
சென்னை: ரஜினியை கட்சியில் சேர்க்க அழைப்பு விடுத்து தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் ஆசை வெட்கமறியாதது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்த அறிக்கை:
சிறையிலடைக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியினர் மேற்கொண்டுவரும் போராட்டங்களை விமர்சித்துள்ளார். மேலும் "சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டப்படி வெளிவர முயற்சிக்கலாமே தவிர, தீர்̃ப்பு வழங்கிய நீதிபதியை வசைபாடி, விமர்சித்து சுவரொட்டிகள், என்று பொறுப்பற்ற சிந்தனையற்ற வாசகங்களை எழுதி, வெறுப்பினை மேலும் - பல தரப்பிலும் சம்பாதிப்பது,தேவைதானா? எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒப்பாரி வைப்பதும், பேருந்துகளைக் கொளுத்துவதும், பேருந்துகளில் பயணம் செய்வோர் மண்டைகளை உடைப்பதும், கடைகளை மூடச் சொல்வதும், கடை பொருள்களைக் கொள்ளையடிப்பதும் எந்த வகையில் சரி? இவையெல்லாம் சமூக விரோத செயல்கள் அல்லவா? பள்ளிகளை மூட நிர்ப்பந்தப்படுத்துவதும், மொட்டை போட்டுக் கொள்வதும், தாடி வளர்ப்பதுமான ‘‘மழித்தலும் நீட்டலும்'' ஆன கேலிக் கூத்துக்களை அரங்கேற்றுவதும் செய்தித் தாள்களில், ஊடகங்களில் உலகம் முழுவதும் பரப்பப்படுகின்றன.
இவை எல்லாம் பெருமை தரக்கூடியவைதானா? ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே' என்ற பாரதி பாட்டினையே மாற்றி அல்லவா, இன்று பாடிட பகுத்தறிவுள்ள எவருக்கும் தோன்றும்! என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வீரமணி இது ஒருபுறம்; மறுபுறம் ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?'' என்ற மொழிக்கேற்ப, பல அரசியல் கட்சிகள் அளவுக்கு அதிகமான ஆசையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுப்பிரமணிய சுவாமிகளின் கற்பனைக் கனவுகளும் ஒருபுறம். மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு! ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டு கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்
திட்டமிட்ட ‘அதிபுத்திசாலியாக' மாறிடத் துடியாய்த் துடிக்கிறது!
இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள வீரமணி இறுதியில் சிரிப்பவர் யார்? இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது. காலம் புரிய வைக்கக் காத்திருக்கிறது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.