மதுவுக்கு எதிரான கோவன் பாட்டால் என்ன தேசத் துரோகம் நடந்து விட்டது? கி.வீரமணி கேள்வி
சென்னை: டாஸ்மாக்குக்கு எதிராக கோவன் இயற்றி பாடிய பாடலால் என்ன தேசத் துரோகம் நடந்து விட்டது? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசின் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் பாடகர் கோவனை நள்ளிரவில் கைது செய்து இந்தியத் தண்டனைச் சட்டம் 124 (தேச துரோகம்) 153 (சமூகத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தல்) என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கபபட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக இணைய தளங்களிலும் இப்பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது - பொது வீதிகளிலும் பாடிக் கொண்டும் இருக்கிறார். வழக்கில் குறிப்பிட்டுள்ளது போல அவரது பாட்டால் என்ன தேசத் துரோகம் நடந்து விட்டது? இரு தரப்பினருக்குமிடையே மோதல் எங்கே ஏற்பட்டு விட்டது?
பெரியார் திடலில் ‘தாலி அகற்றம், மாட்டுக்கறி விருந்து' என்ற கொள்கைத் திட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்தபோதுகூட காவல்துறை இப்படித்தான் நடந்து கொண்டது. வழக்கொன்றையும் பதிவு செய்தது ... அதிகாரம் ஓர் ஆபத்தான கருவி - அதனை அதிக கவனத்துடன பயன்படுத்த வேண்டும்.
குடி - டாஸ்மாக் பற்றிய பாடல் இரு பிரிவினர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தவில்லை; பெரும்பாலான குடும்பங்களில் தான் அன்றாடம் மோதலையும் - அமைதியின்மையையும் டாஸ்மாக் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் உண்மைக்கும், நியாயத்துக்கும் மாறாக அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தலாமா?
நாட்டு மக்களால் தந்தை என்று மதிக்கப்படுகின்ற தந்தை பெரியார் பற்றி கேவலமாக - இழிவாகப் பேசிய பேர் வழிகள் எல்லாம் நாட்டில் ‘ராஜா'வாகத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து புகார் கொடுத்தும் அதனைக் கண்டு கொள்ளாத காவல்துறை - பாடகர் ஒருவர் டாஸ்மாக்கை முன்னிறுத்தி முதல்வரை விமர்சித்தார் என்பதற்காக அவர்மீது கண்மூடித்தனமாக சட்டப் பிரயோகத்தை மேற்கொள்ளலாமா!?
மத்தியிலே இருக்கக் கூடிய பிஜேபி ஆட்சியும் சரி, தமிழ்நாட்டில் நடைபெறக் கூடிய அ.இ.அ.தி.மு.க., ஆட்சியும் சரி, கருத்துரிமைக்கு எதிராகக் கூட்டணி சேர்ந்து விட்டது போல் தோன்றுகிறது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது - பாடகர் கோவன் மீதான வழக்கை விலக்கிக் கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications