அமைச்சரவையில் 3-வது இடத்துக்கு முன்னேறிய கே.ஏ.செங்கோட்டையன்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கொட்டையன்.
சென்னை: முதல்வர் பதவி கனவு தகர்ந்து போன கே.ஏ. செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது அவரது ஆதரவாளர்களை ஆறுதல்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் செங்கோட்டையன். 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது செங்கோட்டையனை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்தார்.
இதற்கு காரணமே செங்கோட்டையன் பற்றிய ஏடாகூட புகார்கள்தான். 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோதும் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
சலசலப்பு
செங்கோட்டையனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிதான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஐவரணியில் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலையெடுத்த போது செங்கோட்டையன் தரப்பில் இருந்து சலசலப்பு கிளம்பியது.
அவைத்தலைவர்
இதனை சமாளிக்க கட்சி மற்றும் அமைச்சரவையில் முக்கிய இடம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அதிமுக இரண்டாக பிளவுபட்டு. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் ஓபிஎஸ் அணிக்கு தாவ அந்த பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது.
முதல்வர் வேட்பாளர்
இதையடுத்து சசிகலா முதல்வராக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் செங்கோட்டையன் பெயர் அடிபட்டது. ஆனால் செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறுவழியின்றி செங்கோட்டையன் அமைதி காத்தார்.
கேபினட்டில் 3-வது இடம்
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசு அமைய பொறுப்பேற்கிறது. இதில் செங்கோட்டையனுக்கு பள்ளி கல்வித் துறை இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக கட்சி, ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் 3-வது இடம் கிடைத்துள்ளது. இது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.