ஷரீஅத் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு: கே.எம். காதர் மொகிதீன் கடும் கண்டனம்
சென்னை: ஷரி அத் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு இந்திய வரலாற்றில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை உச்சநீதிமன்றத்தில் துவக்கி வைத்துள்ளது. இது தவறு மட்டுமல்ல; மாபெரும் தவறு; இமாலயத் தவறு. இஸ்லாமிய ஷரீஅத் சட்டமானது திருக்குர்ஆன் அடிப்படை யிலும், திருநபி (ஸல்) அவர்களின் போதனைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவை. உலகம் முழுவதும் 1500 ஆண்டு காலமாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஷரீஅத் சட்டத்தில் உள்ள சில பகுதிகளை குறிப்பாக விவாகரத்து, பலதார மணம் போன்றவற்றை எதிர்த்தும் இந்தியாவில் அந்தப் பிரிவுகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் இருக்கத் தேவை இல்லை என்றும் கூறும் வகை யில் மத்திய அரசின் போக்கு அமைந்துள்ளது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்துக்குரிய உண்மையான விளக்கத்தைத் தருவதற்கு மார்க்க மேதைகளான உலமாக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய சட்டங்களுக்கு நீதிமன்றம் மற்றும் அரசாங்கங்கள் தருகின்ற விளக்கங்களை இந்திய முஸ்லிம்கள் ஏற்க வேண்டும் என்பதைப் போல் மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கிறது. இஸ்லாமிய சட்டம் குர்ஆன், நபி மொழி அடிப்படையில் அமைந்தது. இதை விளக்கி, விவரித்து தெளிவு படுத்த வேண்டியவர்கள் மார்க்க மேதைகளான உலமா பெருமக்கள்தான். எந்த ஒரு முஸ்லிம் நாட்டு அரசும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு தருகிற விளக்கத்தை விரிவுரையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றதில்லை.
ஷாபானு வழக்கின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் அவர்கள், குர்ஆனின் வசனத்திற்கு புதியதொரு விளக்கம் தருவதற்கு முற்பட்டபோது, இந்தியாவில் உள்ள மார்க்க மேதைகளும், முஸ்லிம் சமுதாயமும் வன்மையாக எதிர்த்து வரலாறு படைத்திருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரீஅத்தை பின் பற்றுவதற்கு பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஏற்கப்போவதில்லை. உதாரணமாக லிபியாவில் அன்று ஆட்சி செய்த கடாபி தனது நாட்டில் உள்ள தொழிற்சாலை ஊழியர்கள் பளுவான வேலைகளில் ஈடுபடுவதால் ரமளான் மாதத்தில் நோன்பு வைக்கத் தேவையில்லை என்று சட்டம் இயற்றினார். உடனே முஸ்லிம் உலமாக்கள் அதை எள்ளி நகையாடினர்களே தவிர, அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிற முஸ்லிம் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் இந்திய முஸ்லிம்களுக்கு மார்க்க விஷயங்களில் வழிகாட்டிகளாக ஆகமுடியாது. இந்திய அரசு பாகிஸ்தான் நாடு ஒரு பயங்கரவாத நாடு என்று வர்ணிக்கிறது. அதை உண்மை என உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகள் இன்றைய தினம் ஏற்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிம் நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் இந்திய முஸ்லிம்கள் அந்த பயங்கரவாதத்தை ஏற்பார்களா? ஓராயிரம் அறிஞர் பெருமக்கள் இந்த பயங்கரவாதத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பது இந்தியாவில்தான். மத்தியில் ஆளக் கூடிய பா.ஜ.க. அரசு தனது கனவுத் திட்டமான ஒரேவிதமான சிவில் சட்டத்தை நாட்டிலே கொண்டு வந்து அமுல்படுத்தி இந்திய முஸ்லிம்களை அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற ஷரீஅத் சட்டத்திலிருந்து பிரித்து விடலாம் என்று கருதினால், அது கற்பனை; அது நாட்டிலே நடக்காத ஒன்று. தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர், சமீபத்தில் ஒரு எச்சரிக்கை செய்துள்ளார். அதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ''மத்திய அரசு பொது சிவில் சட்டம் என்ற போர்வையில் குளவிக் கூட்டை கலைக்க வேண்டாம்' என்று கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications