கொடுமை... கலாமுக்கு அஞ்சலி செலுத்த வந்த உறவினரிடம் ரூ.12,000 பணம் திருட்டு
திண்டுக்கல்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பேருந்தில் வந்த அவரது உறவினரிடம் ரூ.12,000 பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று அப்துல் கலாம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தியை அறிந்த அப்துல்கலாமின் உறவினரும், சித்த வைத்தியருமான அப்துல்கரீம் என்பவர் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து தமிழக அரசுப் பேருந்தில் ஏறி ராமேஸ்வரம் கிளம்பினார்.

அப்போது அவருக்கு அருகில் உட்கார்ந்து வந்த நபர் ஆறுதல் கூறிக்கொண்டே வந்தார். வழியில் ஒரு ஹோட்டலில் பேருந்து நின்ற போது அருகில் இருந்த நபர் டீ வாங்கி கொடுத்துள்ளார். டீயை குடித்த அப்துல்கரீம் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அப்துல்கரீம் அவரது பாக்கெட்டில் இருந்த பணம் 12 ஆயிரம் ரூபாயை காணமால் போனதும் கதறி அழுதார். அருகில் உட்கார்ந்து வந்தவர் டீயில் மயக்க மருந்து கொடுத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த ஓமலூர் காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இதை கேள்விப்பட்டு ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே பேருந்தை நிறுத்திய தமிழரசு, அப்துல்கலாமின் உறவினர் அப்துல்கரீமை பேருந்தில் இருந்து இறக்கி அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அவரை தமிழரசு தனது காரில் ஏற்றி கொண்டு திண்டுக்கல் வரை அழைத்து கொண்டு சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் ஏற்றி வைத்து அவருக்கு பணமும் கொடுத்த அனுப்பி வைத்தார்.
அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற உறவினரிடம் மர்மநபர் ஒருவர் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications