கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்.. அமித்ஷாவுக்கு அண்ணாமலை பரபர கடிதம்.. என்ன சொன்னார்?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்த 109 பேர் உடல் நலன் பாதிக்கபட்டனர். இதையடுத்து அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

இதே போல் மேலும் சில புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி பலர் பலியாகினர். தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ தொட்டது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
விஷ சாராய விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்தனர். திமுக அரசின் செயல்பாடின்மையால் கடந்த 2 ஆண்டுகள் மட்டும் விஷ சாராயம் அருந்தி 60 பேர் பலியாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை மாநில அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது எனக் கூறியுள்ள அண்ணாமலை, சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்துள்ளார். உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் உள்ளூர் திமுகவினரின் உத்தரவின் பேரில் நடைபெற்று இருப்பதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம் எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications