உயிரை உறிஞ்சும் கள்ளச்சாராயம்.. கள்ளக்குறிச்சியில் பலி 59 ஆக உயர்வு.. 151 பேருக்கு தொடர் சிகிச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 151 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். மெத்தனால் கலந்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அவர்கள் வாங்கி குடித்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பலரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். நேற்று வரை மொத்தம் 58 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில் தான் இன்று காலையில் பலி எண்ணிக்கை என்பது 59 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ஜான் பாட்ஷா என்பவர் இன்று காலையில் உயிரிழந்தார்.
இவர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் முதலில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு உயர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜான் பாட்ஷா பலியாகி உள்ளார்.
மேலும் தற்போது 4 மருத்துவமனைகளில் மொத்தம் 151 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனை வாரியாக பார்த்தால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 பெண்கள் உள்பட 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 151 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications