கள்ளக்குறிச்சி கலவரம்.. பெற்றோர் கோரிக்கை நிறைவேற்றப்படும்.. நாளை அறிக்கை தாக்கல்: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சின்னசேலம், நயினார்பாளையத்தில் வரும் 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் அறிவித்தார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி, தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது.
இதனிடையே, மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சிப் போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. போராட்டத்தின் போது காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியும், காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் காயமடைந்தார். 20க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசியதாது : இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வந்த நிலையில், நாளை இதுதொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். போராட்டத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications