பள்ளி மாணவிகளிடம் டபுள் மீனிங் பேச்சு.. கள்ளக்குறிச்சியில் சமூக அறிவியல் ஆசிரியர் அத்துமீறல்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் இரட்டை அர்த்தத்தில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியரின் அத்துமீறல் பற்றி பெற்றோருக்கு மாணவிகள் தெரிவித்துள்ளனர். பெற்றொரின் புகாரையடுத்து, ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சமூக அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். 59 வயதாகும் இவர், இன்னும் 3 மாதங்களில் பணி ஓய்வு பெற இருக்கிறார். ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் தகாத வார்த்தைகளை பேசி வந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து. ஆசிரியரின் அணுகுமுறையை பல்வேறு வழிகளில் மாணவிகள் தவிர்க்க முயன்றிருக்கின்றனர். இருப்பினும் ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு இருந்திருக்கிறது.
எனவே மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளனர். ஒன்றிரண்டு மாணவிகளிடம் மட்டும்தான் இதுபோன்ற அத்த மீறல் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு.. எல்லா மாணவிகளிடமும் இப்படித்தான் பேசுகிறார் என்பது பின்னரே தெரிந்திருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியருக்கும், முதன்மைக கல்வி அதிகாரிக்கும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உடனடியாக உத்தரவிட்டிருக்கிறது.
முதல் கட்டமாக ஆசிரியர் அன்பழகன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருந்த ஆசிரியர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி சர்ச்சையில் சிக்கியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
மாணவிகளுக்கான பாதுகாப்பான பள்ளி கல்வி சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு. ஆசிரியர்கள் மாணவிகளிடம் கண்ணியமாக நடந்துக்கொள்ள வேண்டும். அதையும் பள்ளிக்கல்வித்துறைதான் உறுதி செய்ய வேண்டும். இது சமூக மாற்றத்திற்கான பணியாக தமிழக அரசு கருத வேண்டும். பெண்களுக்கு என தனியாக பள்ளியையும், ஆண்களுக்கு என தனியாக பள்ளியையும் உருவாக்குவதற்கு மாற்றாக, மழைலையர் மற்றும் தொடக்க கல்வியிலிருந்து இருபாலருக்கான பள்ளிகளை சிறப்பாக நடத்த அரசு உறுதி ஏற்க வேண்டும்.
ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் புரிந்துக்கொள்ளும்போது பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த புரிதல் மழலையர் பருவத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும். பாலியல் கல்வியை இன்னும் சிறப்பாக சொல்லிக்கொடுப்பது. ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தொடர் செயல்பாடுகள் மூலம் மட்டுமே மாணவிகளை பாலியல் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதும் கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications