பக்தர்கள் வெள்ளத்தில் பச்சைப்பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். ஆண்டாள் கூடிய மாலை, பரிவட்டம் அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
வைகையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பத்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சர்க்கரைக் கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி பக்த்தர்கள் கள்ளழகரை வழிபட்டனர்.
கள்ளழகர் வேடம் பூண்டு வந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து பரவசமடைந்தனர்.
சித்திரை திருவிழா
மதுரையில் நடந்து வரும் சித்திரைத் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தங்கையின் திருமணம்
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காணக் கிளம்பும் அண்ணன் அழகர், மதுரை வருவதற்கு தாமதமாகிறது. இதனால் தங்கையின் திருமணம் முன்கூட்டியே முடிந்து விடுகிறது.
அண்ணன் அழகரின் வருத்தம்
இதனால் வருத்தம் கொண்ட அண்ணன் அழகர், மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிப் போய் விடுவதாக ஐதீகம். இதைத்தான் வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
எதிர்கொண்டு அழைத்த பக்தர்கள்
இன்று வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கினார். முன்னதாக செவ்வாய்கிழமை மதுரை வந்த அழகருக்கு வழியெங்கும் மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து அவரது அருளைப் பெற்றனர்.
அதிர்வேட்டு முழங்க ஆட்டம்
அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், வர்ணித்து பாட்டுப்பாடி, ஆட்டம்ஆடி, அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட் போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.
ஆண்டாள் சூடிய மாலை
செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வீரராகவப் பெருமாள் எதிர்சேவை
இன்று ( புதன்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.வைகை ஆற்றுக்குவந்த அழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார்.
பச்சைப்பட்டு உடுத்தி
தொடர்ந்து ஆடி அசைந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வணங்கினர்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பக்தர்கள் பரவசம்
ஆற்றில் இறங்கிய கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அவரது அருளைப் பெற்றனர். சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றில் தண்ணீர்திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் மதுரையிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த முறை ஆற்றில் தண்ணீர் வரத்து சீராக இருந்தது.
சாபவிமோசனம்
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் சேவை சாதித்த அழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் வணங்கினர். தொடர்ந்து ஆற்றங்கரை வழியாக அழகர், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.
தொடர்ந்து வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, மண்டூக (தவளை) உருவில் தவம் இருந்த சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார்.