அருவியில் தத்தளித்த மகன்.. காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட தாய்.. அந்த நொடியில் என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற போது சிக்கிக்கொண்ட மகனை காப்பாற்றி விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவில் உள்ளது வடபொன்பரப்பி. இந்த ஊரில் அருகே உள்ள கிராமம் லக்கிநாயக்கன்பட்டி. இங்கு ரமேஷ் மற்றும் மாணிக்கவள்ளி(வயது 30) வசித்து வந்தனர். இவர்களுக்கு கிஷோர்(13), கிரண்குமார் (12) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். லக்கிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் கிஷோர் 8-ம் வகுப்பும், கிரண்குமார் 6-ம் வகுப்பும் படித்து வரு கிறார்கள்.

கல்வராயன்மலையில் பெய்த மழையால் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. நேற்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணிக்கவள்ளி தனது மகன்களுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றார். அப்போது அவர், தனது தோழியான பாக்கியராஜ் மனைவி ராதிகாவையும்(29) அழைத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே நீர்வீழ்ச்சியில் இறங்கி 5 பேரும் குளித்துக்கொண்டிருந்த போது கிரண்குமார், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணிக்கவள்ளி, துரிதமாக செயல்பட்டு தனது மகனை காப்பாற்றி, பாறையில் நின்றிருந்த ராதிகாவிடம் கொடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுத்த சில நொடிகளில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வேகமாக வந்தது. அந்த தண்ணீர் அப்படியே மாணிக்கவள்ளியை வேகமாக இழுத்துச் சென்றது. ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். உடனே ராதிகா தண்ணீரில் குதித்து ராதிகாவை தேடிப்பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் மற்றும் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின் மாணிக்கவள்ளி உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தாயின் உடலை பார்த்து மகன்கள் கதறி அழுதது கண்போரை கலங்க வைத்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். நீர்வீழ்ச்சியில் தத்தளித்த மகனை காப்பாற்றி விட்டு தாய் உயிரை விட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications