கட்சி கொள்கைகளை மதுரையில் அறிவிப்பேன் பொறுத்திருங்கள் - கமல்
மதுரை ஒத்தக்கடையில் நாளை நடைபெறும் பிரம்மாண்டமான மாநாட்டில் கட்சியை அறிவித்து கொடியை ஏற்றும் கமல் கொள்கைகளை விளக்கி பேசுவார்.
Recommended Video
சென்னை: கட்சி, கொடி, கொள்கைகளைப் பற்றி மதுரையில் அறிவிக்க உள்ளதாகவும் அதுவரையில் பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாளை மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கை சாராம்சத்தினையும் வெளியிடவுள்ளார் நடிகர் கமல்.
இந்நிகழ்வில் பங்கேற்க பலதரப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பதோடு வாழ்த்து பெற்றுவருகிறார்.
ஒத்தக்கடையில் பிரம்மாண்டம்
அரசியல் களம் காணப்போகும் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நாளை தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கிறார். இதற்காக ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
புதுயுகம் படைக்கலாம்
இந்நிலையில், தமது ட்வீட்டர் பக்கத்தில் நாளை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கமல். அதில், "நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும், எனது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி கொடி ஏற்றுகிறார் கமல்
இன்று மதுரை செல்லும் கமல், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார். ஒத்தக்கடையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சினிமாவிற்கு செட் போடுவது போல மேடை,லைட் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சிக்கொடியை ஏற்றி பேசும் கமல் கொள்கைகளை விளக்க உள்ளார்.
பொறுத்திருங்கள்
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பயணத்தை தொடங்கி விட்டதாகவும் தனக்கு ஆதரவு தரும் அனைவரையும், வாழ்த்துபவர்களையும் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். அப்போது அவரிடம், கட்சி கொள்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் கமல், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன். அதற்காகத்தானே அங்கே மேடை போட்டிருக்கிறோம். அதுவரை ஒருநாள் பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார்.