என் பேச்சு புரியவில்லையா?.. அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிக்ஸ்னரி அனுப்பிடுவோம்- கமல் நக்கல்
உத்திரமேரூர்: எனது பேச்சு புரியவில்லை என்றால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிக்ஸ்னரி அனுப்புவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டனர். 2-ஆவது இன்னிங்சில் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு அரசியல் அரிதாரம் பூசி சிலர் வந்துள்ளனர்.
சரமாரி விமர்சனம்
இன்னோருவர் இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. யாருக்குமே புரியாது. தனி அகராதி வைத்துதான் அவரது பேச்சுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது சூழ்நிலையால் கட்சியை ஆரம்பித்தார் என்று ஜெயக்குமார் சரமாரியாக விமர்சனம் செய்தார்.
கிராமசபை கூட்டம்
இந்நிலையில் உத்தரமேரூரில் களியாண்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். முன்னதாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், களியாம்பூண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் நான் பார்வையாளராக கலந்து கொண்டேன்.
நினைவுப்படுத்தும் கடமை
கிராம சபை கூட்டம் நடக்கிறதா என்பதை பார்கக வந்தோம். கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஆயுதம் நம் கையில் இருந்தபோதிலும் அது சரிவர நடக்காமல் பல ஊர்களில் அது ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தது. அதை மீண்டும் நினைவுப்படுத்தும் கடமை மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது.
முக்கியமல்ல
இதை நடத்துவதன் நோக்கமே நற்பணிகள் பல இந்த கிராமத்தை சென்றடைய வேண்டும் என்பதுதான். அமைச்சருக்கு நான் பேசுவது புரியவில்லை என்றால் டிக்ஸ்னரி அனுப்புவேன். எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல , என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம்.
காந்தியின் இன்னிங்ஸ்
மக்களுக்கு செவி சாய்க்காத அரசுக்கு என்ன ஆகும் என்பது சரித்திரம் சொல்லும். காந்தியின் முதல் இன்னிங்ஸ் ஆப்பிரிக்காவிலும் இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவிலும் தொடங்கியது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
ஊழல்
அமைச்சர் ஜெயக்குமார் பதவி பறி போய்விடும் என்ற பயத்தில் பேசுகிறார். கிராம சபை கூட்டங்கள் சரிவர செயல்படாததே ஊழலுக்கு காரணம் ஆகும் என்றார் கமல்.