என் கூட வாங்கன்னு ரஜினியை கூப்பிட்டிருக்கேன்.. கமல்
மதுரையில் நான் தொடங்க போகும் அரசியல் பயணத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்குமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக கமல் தெரிவித்தார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை திடீரென சந்தித்தார் கமல்ஹாசன். இன்னும் இரு நாட்களில் அரசியல் கட்சியை தொடங்கும் நிலையில் கமல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று திடீரென போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்றார். அங்கு ரஜினிகாந்தை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியுடன் நான் சந்தித்தது நட்பு ரீதியிலானது. அரசியல் ரீதியிலானது அல்ல.
மதுரையில் 21-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தேன். அரசியல் பயணம் மேற்கொள்ளும் முன்னர் எனக்கு பிடித்தமானவர்களை சந்தித்து சொல்லவிட்டு வருகிறேன். அதுபோல் ரஜினியை சந்தித்தேன்.
இந்த முடிவை எடுக்கும் போதும் ரஜினியை சந்தித்தேன். தற்போது தொடங்கும் முன்பும் அவரை சந்தித்து சொன்னேன். இது உங்களுக்கு செய்தியாக இருக்கலாம். ஆனால் இது 40 ஆண்டுகளாக எங்களுக்குள் இருக்கும் நடைமுறை.
ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒதுக்கவில்லை என்று கூறுவதெல்லாம் தவறான தகவல். இன்னும் குறுகிய நாட்கள்தான் உள்ளன. அதற்குள் இன்னும் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்று தெரியவில்லை என்றார் கமல்.