பிக் பாஸில் ஒரு கால்.. இந்தியனில் மறு கால்.. நடுவே நாயுடு.. அவ்வப்போது அரசியல்.. நியாயமா ஆண்டவரே!
பிக் பாஸில் ஒரு கால் வைத்துக் கொண்டு படங்களில் மற்றொரு காலை வைத்தால் முழுநேர அரசியல்வாதியாக மாறுவது எப்போது?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முழு நேரமும் ஈடுபடும் கமல், அரசியலில் எப்போது சாதிக்க போகிறார்?
கட்சி தொடங்குவதற்கு முன்னரே தமிழக அரசு குறித்து பல்வேறு விவகாரத்தில் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் பிக்பாஸில் உட்கார்ந்து கொண்டுள்ளார்.

முழு கவனம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறார் கமல். அங்கு தாடி பாலாஜி, நித்யா ஆகியோரின் குடும்ப சண்டைக்கு பஞ்சாயத்து செய்தார். இதை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். மும்தாஜுக்கு அறிவுரை அளிப்பது, இரு பெண்களுக்கு நடுவே படுத்துக் கொள்ளும் மகத்துக்கும், ஷாரிக்கிற்கும் அறிவுரை கூறுவது என கமல் தனது நேரத்தை இதுபோன்ற சில்லரை காரியங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

முழுநேரம் எப்போது
சபாஷ்நாயுடு, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கமலின் டுவீட்டை கூட புரிந்து கொள்ளலாம், ஆனால் அவர் ஒரு படத்தை எப்போது முடிப்பார் என்று கணிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இப்படியே படத்தை இயக்குவதும் நடிப்பதுமாக இருந்தால் கட்சி பணிகளில் ஈடுபடுவது எப்போது?

என்ன வியூகம் வகுத்தீர்
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் எப்படியாயினும் வெற்றி பெற ஜாம்பவான்களான கட்சிகளே இப்போது வியூகம் வகுத்து வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய, தொடங்கவுள்ள கமலும் ரஜினியும் எப்படி இருக்க வேண்டும்? ஒரு செயலியை உருவாக்கி அதில் உங்கள் குறைகளை கூறுங்கள் என்று கூறிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா. ரஜினிதான் இன்னும் கட்சி தொடங்கவில்லை, ஆனால் 8 வழிச்சாலையை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்திருக்கலாமே.

சுயநலம்
ஆக ரஜினிக்கும் கமலுக்கும் படம் எடுப்பதும், நடிப்பதிலுமே அக்கறை உண்டு. ஊழலை ஒழிப்பேன், சிஸ்டத்தை சரி செய்வேன் என்பதெல்லாம் வெறும் டயலாக்குகள் தானா. பொது வாழ்க்கைக்கு வரும் கமலும் ரஜினியும் இன்னும் படத்தில் நடித்து கொண்டிருந்தால் அரசியலில் எப்படி கவனம் செலுத்த முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கால், இந்தியனில் ஒரு கால், நடுவில் நாயுடு, எப்பயாவது அரசியல் என்றிருந்தால் எப்படி. ஏன் எம்ஜிஆர் மட்டும் அரசியலுக்கு வந்துவிட்டு சினிமாவில் நடிக்கவில்லையா என்று ரசிகர்கள் கேட்கலாம். வாஸ்தவம்தான், ஆனால் அவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சினிமாவில் நடித்தார்.

பாசம் உண்டு
இன்றும் எம்ஜிஆரை தெய்வமாக மதிப்போரும் உள்ளனர். ஆனால் ரஜினியும் கமலும் மக்கள் மனதில் இடம்பெறுவதற்கான எந்த ஒரு துரும்பையும் நகர்த்தவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தியாகும்.












Click it and Unblock the Notifications