பொன்னாடையில்லை... மாலையில்லை... கமல் கட்டிப்பிடி வைத்தியம்
கமல் கூட்டத்தில் பொன்னாடையில்லை... மாலையில்லை... தன்னையே ஆடையாக்கி கட்டிப்பிடி வைத்தியம் மட்டுமே செய்தார் கமல்.
Recommended Video
மதுரை: கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து விட்டார் கமல்ஹாசன். கழுத்தில் ஆள் உயர மாலை போடவில்லை. பொன்னாடைகள் குவியவில்லை பதிலுக்கு தன்னையே பொன்னாடையாக்கி கட்டிப்பிடித்து விட்டார் கமல்.
அரசியல் கட்சி என்றாலே மாலைகளும், பொன்னாடைகளும் அதகளப்படும். மாலை விற்பனை செய்பவர்கள் காட்டில் மழைதான். ஜவுளிக்கடைகளில் பொன்னாடைகள் விற்பனை அமோகமாக இருக்கும்.
மதுரையில் கமல் கட்சியை அறிவிக்கப் போகிறார் என்று கூறிய உடனேயே பூ மாலை விற்பனையாளர்களும், பொன்னாடை விற்பனையாளர்களும் உற்சாகமடைந்தனர். ஆனால் தனது கட்சிக் கூட்டத்தில் எதையுமே கொண்டுவர விடவில்லை கமல்ஹாசன்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், பொன்னாடைக்கு பதிலாக தன்னையே ஆடையாக்கி போர்த்துவதாக கூறி கட்டிப்பிடித்தார். இது வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் அறிமுகம் செய்த கட்டிப்பிடி வைத்தியமாகும்.
மாற்று அரசியல் என்று கூறி வரும் கமல், தனது அரசியல் பயணத்தில் முதன் முறையாக நிர்வாகிகளை கவுரவப்படுத்துவதில் மாற்று முறையை கையாண்டார். மதுரையில் மேடையில் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசிய கமல்ஹாசன், அவர்களை கட்டிப்பிடித்தார்.
இது ராமபிரான் தனது பக்தர் அனுமனை ஆலிங்கனம் செய்து ஏற்றுக்கொண்டதைப் போன்றது என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறி வருகின்றனர். எது எப்படியோ கமல் கட்சியில் சேரும் பெண் நிர்வாகிகள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியலையே.