மீண்டும் உயிர் பெற்ற சங்கரராமன் கொலை வழக்கு.. இழுத்தடிக்கப்பட்ட வழக்கு கடந்து வந்த பாதை!
பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது
சென்னை: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்கிறேன் என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. முருகன் அறிவித்தார்.
அத்துடன் நிறைவுபெற்றதாக கருதப்பட்ட காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு தற்போது மீண்டும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தன்னை சார்ந்த வட்டாரத்தை தாண்டி, யாருமே அறிந்திராத ஒரு நபர்தான் சங்கரராமன். ஆனால் அவரது கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தை மட்டுமல்லாமல், இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய கொலையாக மாறிப் போனதற்கு காரணம், இந்தக் கொலையைச் செய்ய கூலிப்படையை ஏவி விட்டவர் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியார் என்று அரசு அவரை அதிரடியாக கைது செய்தது தான்.
அதுவரை ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஜெயேந்திரரைக் கைது செய்தபோது அத்தனை பேரும் அதிர்ந்து போகத்தான் செய்தார்கள். இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட போது முதல்வராக இருந்தவரும் ஜெயலலிதா தான்.

கோயில் மேலாளராக சங்கரராமன்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரைப் பற்றி பல சர்ச்சைகள் உள்ளன. பட்டுப் பட்டென்று பேசக் கூடியவர், போட்டுக் கொடுப்பவர் என்று நிறைய உள்ளன. 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவிலில் உள்ள அலுவலகத்தில் இவர் பிணமாகக் கிடந்தார். கூலிப்படையினர் கோவிலுக்குள் புகுந்து அலுவலகத்திலேயே வைத்து இவரை வெட்டிச் சாய்த்து விட்டுப் போய் விட்டனர்.

ஜெயேந்திரர் அதிரடி கைது
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் பெயர் அடிபடத் தொடங்கியதால் தமிழகமே பரபரப்பானது. நாடும் உன்னிப்படைந்தது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர். இந்த கைது நடந்தது தீபாவளி நாள் அன்று. இவரை தொடர்ந்து 2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்திரரும் கைதானார்.

சூடு பிடித்த வழக்கு
கொலை நடந்த நாள் முதல் 2005 ஜனவரி 10ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 24 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் சங்கர மட நிர்வாகிகள், ஒருவர் விஜயேந்திரரனின் தம்பி ரகு.

ஜெயேந்திரரின் இமேஜ் போனது
இந்த நிலையில் ஜெயேந்திரர் போலீஸ் பிடியில் இருந்தபோது பேசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் பேரால் மதிப்புடன் பார்க்கப்பட்ட ஜெயேந்திரர் படு பரிதாபமாக அந்த வீடியோவில் காட்சி தந்தது பலரையும் அதிர வைத்தது.

அடுத்தடுத்து ஜாமீன்
2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்தது.அடுத்து பிப்ரவரி மாதம் விஜயேந்திரர் ஜாமீனில் வெளி வந்தார். அரசுடன் உடன்பாடு ஏற்பட்டதால் தான் அவர் ஜாமீனில் விடப்பட்டதாகவும் அப்போது பரபரப்பாக புகார்கள் எழுந்தன. மேலும் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் கோரிக்கை எழுந்தது.

புதுவைக்கு வழக்கு மாற்றம்
இந்த பரபரப்பான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தது. ஆனால் இதை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற ஜெயேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 2005ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

ஜெயேந்திரர் நிம்மதி பெருமூச்சு
2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. தமிழகத்தில் விசாரிக்கப்பட்ட போது இருந்த பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக புதுவையில் அடங்க ஆரம்பித்தது. ஆண்டுகளும் உருண்டோடின. பல தடைகள், வாய்தாக்கள், விசாரணைக்கு வர மறுப்பது என பல தடைகளை தாண்டி இறுதி கட்டத்தை எட்டியது வழக்கு.

தடைக்கு மேல் தடை
வழக்கு விசாரணைக்கு இடையூறு செய்யும் விதமாக தடை தடைக்கு மேல் தடை பெற்று, விசாரணைக்கு அடுத்தடுத்து இடைக்காலத் தடையையும் வாங்கி வந்தது ஜெயேந்திரர் தரப்பு. இருப்பினும் ஒரு கட்டத்தில் வழக்கு தீவிரமடைந்தன மொத்தம் 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சியங்கள் அந்தர் பல்டி
விசாரிக்கப்பட்ட 187 சாட்சியங்களில் 82 பேர் பிறழ் சாட்சியாக மாறிதால் வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரம், பணம், இவற்றை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்கி விட்டதாக சங்கரராமன் குடும்பத்தினர் குமுறினர். சட்டத்தின் முன்பு குமுறல் எடுபடாது. நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்தது.

அப்ரூவர் ரவிசுப்ரமணியம்
சாட்சிகள் பலவும் பிறழ் சாட்சிகளாக மாறியதால் வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியானது. பல இடர்கள் வந்தும் இந்த வழக்கில் ரவிசுப்ரமணியம் மட்டுமே அப்ரூவராக மாறினார். ஆனால் இந்த ரவிசுப்ரமணியம் என்ற அந்த சிறிய தூண்டில் வழக்கிற்கு பெரிதாக உதவவில்லை.

நான்கு நீதிபதிகள்
புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்த பின்னர் நான்கு முறை நீதிபதிகள் மாறினார்கள். இந்த வழக்கை நான்கு நீதிபதிகளும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரித்ததால் கால நேரம் அதிகமாக விரயமானது. முதலில் சின்னப்பாண்டி விசாரித்தார். பின்னர் கிருஷ்ணராஜா, அடுத்து ராமசாமி, கடைசியாக சி.எஸ்.முருகன் இதை விசாரித்தனர்.

ஆடியோ வெளியீடு
இந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர் தரப்பிடம் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ வெளியானதே இதற்குக் காரணம். நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டு நீதிபதி முருகன் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்.

முக்கிய குற்றவாளி கொலை
முக்கியக் குற்றவாளி கொலை இந்த நிலையில், சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரும், கூலிப்படையைச் சேர்ந்தவருமான கதிரவன், சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் 2013ம் ஆண்டு நவம்பர் 27ம்தேதி போதிய சாட்சிங்கள் இல்லை எனக்கூறி மிச்சமுள்ள 23 பேரையும் இந்த வழக்கில் நீதிமன்றம் விடுதலை செய்தது.

மீண்டும் சங்கரராமன் வழக்கு
காஞ்சி சங்கரராமனை கொலை செய்தது யார் என்று தெரியாமலேயே அந்த வழக்கு முடிக்கப்பட்டு விட்டதாக அப்போது பெரும் சர்ச்சை வெடித்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாட்சியங்கள் விசாரணை குளறுபடியால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவரால் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications