ஜெயேந்திரருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஆந்திரா மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை
சென்னை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி உடல் நலக்குறைவால் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
காஞ்சி மடத்தி 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ( 81) விஜயவாடாவிலும் மடம் உள்ளது. அங்கு தங்கியிருந்து ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு இன்று திடீரென உடல் நலம் குன்றி மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், அந்த நகரிலுள்ள 'ஆந்திரா மருத்துவமனை'யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஐ சி யு பிரிவில் ஜெயேந்திரர் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர் ரவிராஜு தலைமையில் மருத்துவ குழு ஜெயேந்திரருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ரவிராஜு கூறுகையில், ஜெயேந்திரருக்கு ரத்தத்தில் ஷுகர் அளவு மற்றஅும் சோடியம் அளவு குறைந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை.
மாலை வரை அவர் ஐசியுவில் கண்காணிக்கப்படுவார். பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் வார்டு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
ஜெயேந்திரருக்கு உடல் நலம் குன்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் மருத்துவமனை முன் கூடினர். பின்னர் அவர்கள் ஜெயேந்திரர் உடல் நலம் சீராக வேண்டுமென பிராத்தனையில் ஈடுபட்டனர்.
ஜெயேந்திரர் கடந்த ஆண்டு, ஆந்திராவில் நடைபெற்ற கோதாவரி புஷ்கரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ணா புஷ்கரத்திலும் பங்கேற்றார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜெயேந்திரர் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.