ஓவர் ஆக்டிங் போட்ட அதிகாரிகள்! ஒரு நாள் டிராமா வேண்டாம்! கடிந்துகொண்ட கலெக்டர் கலைச்செல்வி!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் கிராமத்திற்கு ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், ஓவர் ஆக்டிங் போட்ட அதிகாரிகளிடம் ஒரு நாள் டிராமா எதற்கு எனக் கேட்டு கடிந்துகொண்டார்.
பொதுவாக அமைச்சரோ, மாவட்ட ஆட்சியரோ ஒரு இடத்தை ஆய்வு செய்ய செல்கிறார்கள் என்றால் வருவாய் துறை அலுவலர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை பக்காவாக செய்து வைத்திருப்பார்கள். அப்படித்தான் காஞ்சிபுரம் மாவட்டம் கோவூர் கிராமத்திலும் கலெக்டர் வருகையை ஒட்டி பிளிச்சிங் பவுடரை கொட்டி தங்கள் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர் வருவாய் துறை அலுவலர்கள்.
இதனைக் கண்டதும் எதற்கு இந்த ஒரு நாள் டிராமா என கடிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மக்களுக்கு அன்றாடம் என்ன தேவையோ அதை செய்துகொடுங்கள், அதைவிட்டு விட்டு எதற்கு இது போல் ஒரு நாள் கூத்து என வினவினார்.

இப்படி பிளிச்சிங் பவுடரை கொட்டியதை பார்க்கும் மக்களுக்கு யாரோ வருகிறார்கள் போல் அதனால் தான் இப்படியொரு ஏற்பாடு என எண்ணத்தோன்றும் என்றும் இது போல் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
சுருக்கமாக சொல்லப்போனால் தனது வருகையை ஒட்டி எந்த ஸ்பெஷல் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்றும் எப்போதும் போல் இயல்பாக இருக்குமாறும் வருவாய் துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை தேர்தல் பார்வையாளர் உட்பட பல பொறுப்புகளை வகித்தவர். மேலும் கூடுதல் தகவல் என்னவென்றால் செய்தித்துறை இயக்குநர் மோகன் ஐ.ஏ.எஸ்.சின் மனைவியாவார். கணவர் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், அவர் பக்கத்து மாவட்டமான காஞ்சிபுரம் கலெக்டராக உள்ளார்.












Click it and Unblock the Notifications