குடிக்க பணம் தராத மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற கணவர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மது அருந்தப் பணம் தராத மனைவியை கணவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தை அடுத்த உத்தமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி தமிழ்ச்செல்வன் (37 ). அவரது மனைவி சரஸ்வதி (35). இவர் வீட்டில் இருந்தபடியே டெய்லர் பணி செய்து வந்துள்ளார்.
மது போதைக்கு அடிமையான தமிழ்ச்செல்வன், தனது வருமானம் முழுவதையும் அதற்கே செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்துவதற்காக சரஸ்வதியிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
சரஸ்வதி பணம் தர மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தரிக்கோலால் சரஸ்வதியைக் குத்தியுள்ளார் தமிழ்ச்செல்வன். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தமிழ்ச்செல்வனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.