காவிரி: நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.,கைதாகி விடுதலை
நெல்லை : காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், அதற்கு ஆறு வார கால அவகாசமும் வழங்கியது.
ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவிற்குள் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதேநேரத்தில் தமிழக அரசும் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து திமுக சார்பில் இன்று சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் வருகிற 5ம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தலைமையில் அனைத்துக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.