சத்தியமூர்த்தி பவனுக்கு வருகிறார் கனிமொழி... "கை"க்கு திமுக வைக்குமா "சூரிய" வணக்கம்?
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சி இது. இதில் கனிமொழி கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைக்க திமுக கடுமையாக முயன்று வருகிறது. அதிமுகவை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு இருக்கிற அத்தனை கட்சிகளையும் கூட்டு சேர்த்து பிரமாண்ட பலத்துடன் மோத அது முயன்று வருகிறது.
இந்தக் கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற வாதம் ஒருபுறம் இருக்க கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் திமுக மிகச் சரியாக பயன்படுத்தி மற்ற கட்சிகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறது.
சமீபத்தில் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவில் திமுக பிரதிநிதியும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் அடுத்து காங்கிரஸ் விழா ஒன்றில் திமுக இடம் பெறவுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி நாளை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த விழாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் தலைமை அழைத்துள்ளது. அவர்களும் வருவார்கள் என்று தெரிகிறது. எனவே இந்த விழா மேடையானது கூட்டணிக்கான இன்னொரு அச்சாரமாக பார்க்கப்படும் என்றே தெரிகிறது.
தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி கூட்டத்திற்குத்தான், காங்., செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்ச்சி, 9ம் தேதி, காங்., தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கனிமொழி எம்.பி., கலந்து கொள்கிறார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பி.ச.குப்புசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.