டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி விவசாயிகள் உண்ணாவிரதம்!
டெல்லியில் 31 நாட்களாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஞ்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்: டெல்லியில் 31ஆவது நாளாகப் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சிபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொட்டை அடிப்பது, தலைகீழாக நிற்பது, குட்டிக்கரணம் அடிப்பது என நீண்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விவாசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இருந்தபோதும் மனம் தளராமல் விடாப்பிடியாகப் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் பாலாற்று பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் விவசாயிகள் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் செய்யாறு மற்றும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே நடைபெற்றது.