மதுரையில் கந்துவட்டி கொடுமை: வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கொடூரம்: வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்த
மதுரை: கந்துவட்டி கேட்டு பெண்ணை வீடு புகுந்து மிரட்டி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை புதூர் கணேஷ் நகரை சேர்ந்த எஸ். ராஜ்குமார் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
நான் மதுரை கே.கே.நகரில் தனிஸ் கிப்ட்ஸ் மெஜெஸ்டிக் சினி ஹால் என்ற முகவரியில் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன் என்னுடைய தொழில் அபிவிருத்திக்காக நடேச பாண்டியன், ரெய்னாபேகம், சந்திரன், சாந்தி, செந்தில், அன்பு உள்ளிட்ட 20 பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு முறையாக வட்டியும் செலுத்தி வந்தேன்.
கடந்த மே மாதம் துவக்கத்தில் நான் வாங்கிய கடன்தாரர்கள் அனைவரிடத்திலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் நான் கொடுத்த காசோலை சிலிப்புகளை கேட்டும் தரவில்லை.
இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாலை மேற்கண்ட 20 பேர்களும், அடியாட்கள் 30 பேரும் சேர்ந்து என் வீட்டிற்குள் நுழைந்து என்னை அடித்து உதைத்து வாங்கிய கடனுக்கு வட்டியும் சேர்த்து தர வேண்டும், இல்லையென்றால் கொன்று புதைத்து விடுவோம் என்று என்னை மிரட்டினார்கள்.
நான் வலி தாங்க முடியாமல் சப்தம் போட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். அவர்களை கண்டவுடன் மேற்கண்ட நபர்கள் இடத்தை விட்டு ஓடி விட்டார்கள்.
இது குறித்து நான் கடந்த 7ம் தேதி கோ. புதூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் நேரில் சென்று புகார் கொடுத்தேன். ஆனால் என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேற்கண்ட எதிரிகளால் எனது உயிருக்கும், உடமைக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து நேரக்கூடும் என அஞ்சுகிறேன். எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த புகார் மனு மீது முகாந்தரம் இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.