இடைவிடாமல் உயிரைக் குடிக்கும் குமரி மாவட்ட சாலைகள்!
மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் தொடரும் சாலை விபத்துக்களால் உயிரிழப்புகள் தொடர் கதையாகியுள்ளன.
குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மணலிக்கரைக்கு ஒரு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை மணலிக்கரை சென்று விட்டு மீண்டும் தக்கலைக்கு புறப்பட்டது.
இந்த பஸ்சை தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் ஓட்டினார். பஸ் ஈத்தவிளை பாலத்தில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக டிரைவர் மகேஷ் பஸ்சை ஒதுக்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கீழ் ஓடும் பட்டணங்கால்வாய்க்குள் பாய்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் உள்பட 25 க்கும் மேற்பட்ட பயணிகள் அலறினார்கள். அவர்களது சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் உடனடியாக ஆற்றிக்குள் பாய்ந்த மினி பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து பஸ்சுக்குள் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் இறங்கினர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து கொற்றிகோடு போலீசாரும், தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களும் பொது மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மினி பஸ் டிரைவர் மகேசின் காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல, பஸ்சில் பயணம் செய்த மணலிக்கரையை சேர்ந்த மேரிஅல்போன்சாள் மற்றும் இஸ்பிரிஜித் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் 108 ஆம்புலன்சு மூலம் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த தினங்களுக்கு முன் தக்கலை அருகே மினி பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். நேற்று முன் தினம் மாலை திருவட்டாரில் கல்லூரி பஸ் மோதி 3 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில் தக்கலை பகுதியில் மினி பஸ் ஆற்றில் பாய்ந்து 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் விபத்துக்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications