சாவியை எடு.. என்னா தெனாவெட்டு.. போலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்!
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
நாகர்கோவில்: "குஷி" படத்தில் விஜயகுமார் ஒரு வசனம் பேசுவாரே, "அது வளர்ப்பு சரியில்ல.. வளர்த்தவனை சொல்லணும்..."னு அது எவ்வளவு யதார்த்தமும் உண்மையும் கலந்த வார்த்தை தெரியுமா? பெற்றோர்கள் பிள்ளைகளை சரிவர கவனிக்காமல் கண்டிக்காமல் விட்டுவிட்டால் இந்த பைக் ஹீரோ சம்பவம் போலதான் நடக்கும்.
நேற்று நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் அருகே டிராபிக் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தனர். அந்த நேரம் சாலை மிகவும் பரபரப்பாகவும் இருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞன் செல்போனில் பேசியபடியே பைக்கில் வேகமாக வந்தார்.
மரியாதையா சாவி எடு
படு காஸ்ட்லியான, ஸ்போர்ட்ஸ் பைக் அது. அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தன்னை இப்படி வழி மறித்து நிறுத்துகிறார்களே என்ற ஆத்திரத்தில், அந்த போலீசார் மீது வண்டியை வேண்டுமென்றே மோதுவது போல வந்து நிறுத்தினார். இதை போலீசார் தட்டிக் கேட்டனர். ஆனால் அந்த இளைஞர் பேச ஆரம்பித்த தொனியே மிரட்டலாகதான் வந்தது. அதனால் போலீசார் பைக்கில் இருந்து சாவியை எடுத்துகொண்டனர். உடனே இளைஞர் "சாவியை எடு. மரியாதையாக எடு" என்று மிரட்டலாக, தகாத வார்த்தைகளுடன்தான் பேச தொடங்கினார்.
மடக்கி பிடித்த போலீசார்
அது இரு தரப்பிலும் தகராறாக வெடித்தது. ஒரு கட்டத்தில் போலீசாரை தாக்கவும் இந்த இளைஞர் முயன்றார். இதனை பார்த்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் அந்த வாலிபரை தடுத்தார். ஆனால் அவருக்கும் அந்த இளைஞர் கொலை மிரட்டல் விடுக்க தொடங்கினார். உடனே கைகலப்பு தொடங்கியது. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போதும் முரண்டுபிடித்த இளைஞன் போலீசாரின் பிடியிலிருந்து திமிறி ஓட முயற்சித்தார்.
4 பிரிவுகளில் வழக்கு
ஆனாலும் போலீசார் விடவில்லையே. ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் தெரிந்தது, பிரபல துணிக்கடை தொழில் அதிபரின் மகன் அவர் என்பதும் பெயர் ஸ்ரீநாத், வயது 32 என்றும் தெரியவந்தது. இதையடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீநாத்.
நாகரீகம் வேண்டாமா?
பைக்-கை வேகமாக ஓட்டி வந்ததே தவறு. அதிலும் செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டி வந்தது அதைவிட தவறு. போலீசார் என்றில்லை, பெரியவர்களிடம் எப்படி பேசவேண்டும் என்றுகூடவா இளைஞருக்கு இல்லாமல் போய்விட்டது? டிப்-டாப்பாக டிரஸ் போட்டுக் கொண்டு, நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசினால் போதுமா? பொது இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரீகமும் கற்க வேண்டும் அல்லவா!