மீனவர்களை மீட்டுத்தாங்க.. கொட்டும் மழையிலும் குமரி மாவட்டத்தில் மக்கள் ரயில் மறியல்
கன்னியாகுமரியில் உள்ள குழித்துறையில் மீனவர்களின் உறவினர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் தாக்கியபோது காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி குழித்துறையில் அவர்களது உறவினர்கள் கொட்டும் மழையிலும் 5 மணி நேரத்துக்கு மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். சிலரை காணவில்லை. இன்னும் சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர்.

மீனவர்கள் போராட்டம்
இவர்களை மீட்க இந்திய கடலோர காவல் படையும், விமான படையும், கடற்படையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 மீனவ கிராமங்கள் போராட்டம்
இந்நிலையில் மீனவர்கள் காணாமல் போய் 7 நாள்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாதததற்கு உறவினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சின்னத்துறை கிராமத்திலிருந்து 5 கி.மீ.தூரத்துக்கு சின்னத்துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராமத்தினர் பேரணியாக வந்தனர்.

ரயில் மறியல் போராட்டம்
முதலில் 1000 பேருடன் தொடங்கிய இந்த பேரணியில் பின்னர் வழிநெடுகிலும் மக்கள் இணைந்து கொண்டனர். குழித்துறையில் உள்ள ரயில் நிலையத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை சரக டிஐஜி பேச்சுவார்த்தை
பல மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போராட்டக்காரர்களிடம் நெல்லை சரக டிஐஜி கபில் பேச்சுவார்த்தை நடத்தினார். பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபாலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ஆனால் மக்களோ போராட்டத்தை பின்வாங்காமல் கொட்டும் மழையையும் பொருட்டுப்படுத்தாமல் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications