முப்பெரும் தேவியர் வேடமிட்ட மாணவியர்.. காரைக்குடி பள்ளியில் நவராத்திரி விழா
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ஆர். பழனியப்பன் விழாவிற்கு தலைமையேற்றார். தலைமையாசிரியர் ஆ.பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி ரோட்டரி சங்க செயலர் எஸ் மனோகரன், பொருளாளர் எஸ். கிருஷ்ணன், இராமநாதன் வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சியாளர் தேவராஜன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர். முத்துப்பட்டணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் திருமதி பாக்கியம் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவையொட்டி பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து கொலு அமைத்திருந்தனர். சரஸ்வதி, லட்சுமி, பார்வதி வேடமிட்டு முப்பெரும் தேவியர்களாகவும், பிள்ளையார் வேடமிட்டும் மாணவர்கள் கொலுவாக அமர்ந்திருந்தது அனைவரின் பாராட்டை பெற்றது.

அதைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார். பெற்றோர்களும், மாணவர்களும் கொலுவை பார்வையிட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி எஸ். சித்ரா மற்றும் விஜயலட்சுமி அவர்கள் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் விஜய காந்தி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications