மாணவிகளுக்கு இனி “கராத்தே பயிற்சி” - முதல்கட்டமாக கோவை, திருப்பூரில் தொடக்கம்
கோவை: கோவை மற்றும் திருப்பூரில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு கராத்தே பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.
பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து செல்லும் போதோ அல்லது தனியாக வீட்டில் இருக்கும்போதோ, அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகாமல் தடுக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், மாணவியருக்கு தற்காப்பு கலையான கராத்தே கற்றுத்தர அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி அனைவருக்கும் கல்வி இயக்கம் பெண் கல்வித்திட்டத்தின் கீழ், மூன்று விதமான பயிற்சிகள் மாணவியருக்கு அளிக்கப்படும். அதில், ஒன்று தான் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சியாகும். இப்பயிற்சி எட்டாம் வகுப்பு மாணவியருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பலிகளை இந்த பயிற்சி துவங்கவுள்ளது.
ஒவ்வொரு அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்திலும், பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியர் பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, பட்டியல் தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா செய்தியாளர்களிடம், "கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பெண் கல்வி திட்டக் கூறின்படி, 500 மாணவியருக்கு தற்காப்பு பயிற்சியளிக்க முதலில் தெரிவித்தனர். தற்போது, ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.
ஐந்து மாதங்கள் இப்பயிற்சி வழங்கப்படும். மாணவியர் பட்டியல் கேட்டுள்ளோம்; பட்டியல் பார்வையிட்டு எந்த பள்ளியில் இப்பயிற்சியை துவங்கலாம் என முடிவு செய்யப்படும். பின் கராத்தே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி இந்த மாதமே துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.