பதவியில் நீடிக்கனுமா... தமிழக முதல்வருக்கு கர்நாடக அதிமுக செயலாளர் எச்சரிக்கை!
சென்னை: முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி நீடிக்க வேண்டும் என்றால் தினகரனைப் போய்ப் பார்த்து காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட தினகரன் காலில் போய் விழுமாறு அவர் கூறியுள்ளார். மேலும் ஓ.பி.எஸ் அணியையும் அவர் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவால் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை ஜீரோ பன்னீர் செல்வம் என்று தாக்கியுள்ளார்.
வா. மைத்ரேயனை புரோக்கர் என்று கூறியுள்ளார். அந்த நாள் சொல்லிருக்கான் என்று ஒருமையிலும் விளித்துள்ளார் கர்நாடக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி. இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலிருந்து:

5 பேர்தான் அதிகம்
அவர்களிடம் 5 பேர்தான் அதிகம் உள்ளனர். எங்களது துணைப் பொதுச் செயலாளரை இதுவரை 25-30 பேர் வந்து பார்த்து விட்டனர். இதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலையில் ஏற்றிக் கொள்ளுங்க
ஜெயக்குமாரும், அதிமுக அமைச்சர்களும் இதை தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். யாருக்கு இப்போது அவர்கள வெண் சாமரம் வீசுகிறார்களோ அவரிடம் போய் இதைச் சொல்ல வேண்டும்.

"ஜீரோ" பன்னீர் செல்வம்
அந்தப் பக்கம் ஜீரோ பன்னீர் செல்வம் ஆட்சியைக் கவிழ்க்க ரெடியாக உள்ளார். காத்திருக்கிறார். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

"புரோக்கர்" மைத்ரேயன்
காலையில் புரோக்கர் மைத்ரேயன் பேசியுள்ளார். அவர் பெரிய புரோக்கர். அவ்வளவுதான் முடிஞ்சிரும்னு சொல்லியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்ததும் பொதுத் தேர்தல் வந்து விடும் எனக் கூறியுள்ளார். யாருக்கோ கைக்கூலியாக இவர்கள் மாறி விட்டனர்.

தினகரனைப் பார்த்தால் தப்பலாம்
இவர்கள் நன்றி விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் தினகரனைப் போய்ப் பாருங்கள். கட்சியும், ஆட்சியும் அப்போதுதான் நிலைக்கும், காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளார் புகழேந்தி.












Click it and Unblock the Notifications