ஜெ. சொத்து குவிப்பு: சென்னை ரிசர்வ் வங்கியில் 2வது நாளாக நகைகளை ஆய்வு செய்த பெங்களூர் நீதிபதி
தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ் வழக்கில் பறிமுதல் செய்துள்ள தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அசையும் சொத்துகளை சென்னையில் இருந்து பெங்களூருக்கு கொண்டுவரக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, நகை மதிப்பீட்டாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என 11 பேர் அடங்கிய குழு சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள அனைத்து நகைகளையும் நேற்று ஆய்வு செய்தனர்.
அத்துடன் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் நீதிபதி அடங்கிய குழு ஆய்வு செய்தது.
இன்று 2வது நாளாகவும் நீதிபதிகள் குழு சென்னையில் நகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தது.