காவிரி பிரச்சனை: ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்கவும் #cauvery
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாண்டியாவில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதற்கிடையே கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நேற்று காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் இன்று அதிகாலையிலேயே போராட்டத்தை துவங்கிவிட்டனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இன்றும் பேருந்து போக்குவரத்து இருக்காது. நேற்று தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற பேருந்துகள் ஓசூரோடு தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டம் நடப்பதால் ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் முன்னெச்சரிக்கையாக அந்த வழிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் ரோடு, பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் மாற்று பாதைகளில் செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications